‘அண்ணாமலை கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பேர்வழி’ - அமைச்சர் சேகர்பாபு அதிரடி அட்டாக் 


சென்னை: என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?' என தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்று சென்னையில் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, ‘குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அண்ணாமலை ஒரு தற்குறி படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.

என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள்.

திமுகவினரை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன் என்கிறார் எச்.ராஜா. திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக’ எனத் தெரிவித்துள்ளார்

x