ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட 25-வது நபர் கனகராஜ் ஆவார்.
பாமக நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இருமுறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே இந்த சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு ஓராண்டுக்கு மேலாகியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து திமுகவினரை காப்பாற்றுவது தொடர்பான வழக்குகளை எல்லாம் விரைவுபடுத்தும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதை வைத்துப் பார்க்கும் போது ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலனைத் தான் முக்கியமாக நினைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்