இந்தியாவில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை திரும்ப அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கையில் 1980-ம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால், இலங்கையிலிருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம் பெயரத் தொடங்கினர். 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3,04,269 இலங்கைத் தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (யுஎன்ஹெச்சிஆர்), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பினர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும், 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வருகின்றனர். ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள மறுவாழ்வு முகாமில் 60 இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த 300-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்தியாவில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை நாட்டுக்கே திரும்ப அழைத்து வருவது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, ஆளுநர் வேதநாயகன் பேசியதாவது: இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களை மீண்டும் நாட்டுக்கே அழைத்து வரவேண்டும் என்று போர் முடிந்ததிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தற்போது தமிழக முகாம்களில் உள்ளவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்து வரமுடியாது. வர விரும்புவோருக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாடு திரும்புவோருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன், அவர்கள் நாடு திரும்புவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் இரு அரசுகளிடமும் முன்வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்