கொளுத்தும் வெயில்; சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் வன விலங்குகள், பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடு!


குரங்குகளுக்கு தர்ப்பூசணி பழங்களை வழங்கும் வனத்துறை பணியாளர். | படங்கள்: எஸ். குரு பிரசாத் |

சேலம்: வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன விலங்குகள், பறவைகள் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

பகல்நேர அதிகபட்ச வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிவிட்ட நிலையில், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு இளநீர், குளிர்பானங்கள் அருந்துவது, குளிர்ந்த நீரில் குளிப்பது, வீடுகள், அலுவலகங்களில் குளிர்சாதன அறையில் இருப்பது என பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொள்கின்றனர்.

கடமான்களுக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை குடில்.

இந்நிலையில், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனத்துறை சார்பில் வனவிலங்குகள், பறவைகளுக்கு, கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புள்ளி மான், கடமான் உள்ளிட்ட விலங்குகளுக்கு தர்ப்பூசணி, வெள்ளரி உள்பட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உணவாக கொடுக்கப்படுகின்றன.

நீரை பனிபோல தெளிக்கும் ஃபாக்கர் இயந்திரம் பொருத்தப்பட்டு வெயில் நேரத்தில் மயில் மற்றும் அரிய வகை வெள்ளை மயிலுக்கு நீர் தெளிக்கப்படுகிறது. இதனிடையே, பூங்காவில் புள்ளி மான், கடமான், சாம்பார் மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் அவற்றுக்கு வெயில் நேரத்தில் இளைப்பாற வசதியாக, இயற்கைப் புற்களால் ஆன நிழற்குடில் அமைக்கப்பட்டுள்ளது.

மயில் உள்ள கூண்டுக்குள் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில்
தண்ணீர் தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், விலங்குகள், பறவைகள் அனைத்துக்கும் போதுமான அளவில் குடிநீர் இருப்பதை, பூங்கா பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறியதாவது: பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் கோடை காலத்தில் நிலவும் வெயிலால் பாதிக்கப்படாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

நடப்பாண்டில் கோடையின் வெப்பம் முன்கூட்டியே அதிகமாக இருப்பதால், சிறப்பு ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துள்ளோம். வெயிலின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள வன விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படாமல் இருக்க, பூங்கா பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர், என்றார்.

உலக வன தினம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், உலக வன தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் தலைமையில், பள்ளிச் சிறுவர்கள் மரக்கன்றுகளை பூங்கா வளாகத்தில் நட்டனர். அப்போது, வனத்தின் முக்கியத்துவம், அதை பாதுகாப்பதன் அவசியம் ஆகியவை குறித்து சிறுவர்களுக்கு, கதை வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வனச்சரகர் கமலநாதன் உள்பட வனத்துறையினர் பங்கேற்றனர்.

x