சென்னை: திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி நீதிமன்ற பெண் ஊழியருக்கு பேறு கால விடுப்பு வழங்க மறுத்தது மனித உரிமை மீறல் என்பதால், சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த முன்சீப் நீதிமன்ற நீதிபதி, அந்த பெண் ஊழியர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரித்துள்ளதாகக் கூறி அவருக்கு விடுப்பு வழங்க மறுத்து விட்டார். அதை எதிர்த்து அந்த பெண் ஊழியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது கணவர் கடந்த 2020-ம் ஆண்டு இறந்து விட்டார்.
அதன்பின்னர் பாரதி என்பவரும் நானும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். இதில் நான் கர்ப்ப மடைந்தேன். இந்நிலையில் அவர் என்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் போலீஸில் புகார் அளித்தேன். அதன்பிறகு 2024-ல் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு பேறு காலவிடுப்பு வழங்க முன்சீப் நீதிபதியும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மறுத்து விட்டனர் எனக்கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கர்ப்பம் தரித்த பெண் ஊழியருக்கு சட்ட ரீதியாக பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். இதற்காக அவரது பின்புலத்தை ஆராய வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல, அவர் பதிவு திருமணம் செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.
அவருக்கு பேறுகால விடுப்பு வழங்காதது மனித உரிமை மீறல் என்பதால் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.