முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கேரள எல்லையை முற்றுகையிடப் பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை தமிழக எல்லை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில், தமிழக, கேரள அதிகாரிகளையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் உள்ளடக்கிய 7 பேர் கொண்ட குழுவினர் இன்று பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளனர்.
இக்குழுவின் கவனத்துக்கு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் வகையிலும், கேரளாவின் ஆதிக்கத்தைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் லோயர்கேம்ப் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, கேரள எல்லையை முற்றுகையிடச் சென்றனர்.
பெரியாறு-வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் மற்றும் தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் அப்பாஸ்மந்திரி, மாவட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, குமுளி மலைச் சாலை வழியாக கேரளாவை நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். மலையடிவாரத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடி அருகே விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள், அங்குள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். பேபி அணையைப் பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும். கேரள நீர்ப்பாசனத் துறையினர் பெரியாறு அணையைவிட்டு வெளியேற வேண்டும், அணை மறு ஒப்பந்த நகலை காட்சிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், கம்பம் நகர வர்த்தக சங்கத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.