தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. கடந்த 1983-ல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சாதி, பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான விவரங்களை வீடு வீடாகச் சென்று 100 சதவீதம் சேகரித்து, 1985-ல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது தமிழகத்தில் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. இதனால் தமிழக மக்களின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு குறித்து ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க சாதி வாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.
உச்ச நீதிமன்றத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் சாதி, பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கணக்கெடுப்பை நடத்துவது இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் அமையும். தமிழகத்தில் உள்ள சாதிகள், பழங்குடி இனங்கள், குழுக்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2020 டிச. 21-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையில் 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே 2020-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, "சாதி வாரியான கணக்கெடுப்பு மத்திய அரசுடன் தொடர்புடையது. மேலும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டது