மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம், விவாகரத்து வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து, விவாகரத்து வழங்கக் கோரி அந்நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது 2-வது திருமணம். இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்திலிருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர் ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார். தன்னையும், மாமனார், மாமியாரையும் மதிக்கவில்லை. அதிகமாக செலவு செய்கிறார். அதிக நேரம் போனிலேயே இருக்கிறார். வீட்டுவேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி, விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. மேலும், மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.
மனைவி ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றமாகாது. ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகியவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது.
தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார், அப்போது அவரது தனியுரிமையை கைக்கொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக, அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்