பழநி முருகன் கோயிலில் மூச்சு திணறி பக்தர் உயிரிழப்பு


பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி (47), தனது நண்பர்களுடன் சபரிமலை கோயிலுக்குச் சென்று விட்டு நேற்று மாலை பழநி முருகன் கோயிலுக்கு வந்தார். படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், ரூ.10 கட்டண தரிசன வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

உடனடியாக மலைக் கோயிலில் உள்ள மருத்துவ உதவி மையத்தில் அவருக்கு முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வமணி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர், ராமேசுவரம் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தபோது பக்தர்கள் மூச்சுத்திணறல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

x