தூத்துக்குடி: சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடனோ புகைப் படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் பதிவிட்டதாக கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடியில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பா்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடனோ புகைப் படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இவ்வாறு கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 பேரை கைது செய்து நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம். மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.