கந்தர்வக்கோட்டை தொகுதியில் அமைகிறது தொழிற்பூங்கா - பொதுமக்கள் வரவேற்பு


புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 200 ஏக்கரிலான தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைகிறது. வேலைவாய்ப்பு கிடைக்கும், அடிப்படை வசதிகள் மேம்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ஒரு மாநகராட்சி, நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகளில் சுமார் 16.18 லட்சம் பேர் வசிக்கின்றனர். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாத இம்மாவட்டத்தில் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழில்களையே மக்கள் சார்ந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக புதுக்கோட்டை அருகே ஒரு சிப்காட்டும், ஒரு சிட்கோவும் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அங்கும் படிப்படியாக தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

தவிர, விராலிமலை அருகே நீர்ப்பழனியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சிட்கோவும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆலங்குடி அருகே வம்பன் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சிட்கோ அறிவிப்போடு நிற்கிறது. மாவட்டத்தில் உள்ளூர் விளைபொருட்களுக்கு ஏற்ப தொழில்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பட்ட மக்களாலும் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் சுமார் 200 ஏக்கரில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் என அண்மையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் உள்ளது. பாறை நிலமாகவும், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் உள்ளதால் விவசாயமும் கேள்விக் குறியாக உள்ளது. தரிசாகவும், யூகலிப்டஸ் காடாகவும் காட்சி அளிக்கிறது. ஆழ்துளை கிணறு அமைத்து பாசனம் மேற்கொள்ள முடியவில்லை. உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லாததால் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு இப்பகுதி மக்கள் தினக்கூலி வேலைக்கு செல் கின்றனர். பொருளாதார நெருக்கடி உள்ளது. மேலும், உயர்கல்விக்கும் அப்பகுதியில் வசதி இல்லாத நிலை இருந்தது.

திருச்சி, தஞ்சாவூரைச் ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் தொழில்சாலைகளால் புதுக்கோட்டைக்கு வணிக ரீதியிலான தொடர்பு இல்லை. இந்நிலையில்தான், புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வரப்பட்டது.

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தொழிற்பூங்கா அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை தொகுதியில் தெம்மாவூர், வத்தனாக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட துறை செயலர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும். ஆட்சியரும் இப்பூங்காவை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த புதிய தொழிற்பூங்கா மூலம் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் .மேலும், பொருளாதாரம், சாலை வசதிகள் மேம்படும். தொழிற்பூங்கா அறிவித்த தமிழக முதல்வருக்கு சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 18) நன்றி தெரிவித்து பேச உள்ளேன் என்றார்.

x