திருப்பூர்: இணையம் வாயிலாக ரசாயன உரங்களை வாங்கினால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரவடிவேலு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உரக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் இணைய வழி பரிவர்த்தனை செய்வதற்கான வழிவகை இல்லை. எனவே, விவசாயிகள் இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்கள் தரமானதா என்பதை உறுதிப் படுத்த இயலாது. எனவே, ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை இணைய வழி வாயிலாகவோ அல்லது தங்கள் தோட்டங்களில் நேரடியாக வந்து விற்பனை மேற்கொள்ள முயலும் முகவர்கள் மூலமாக உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம்.
இம்மாதிரியான உரங்களை வாங்கி பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன் மகசூல் இழப்பீடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேளாண் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்கள் மூலமாகவே ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள் தரத்தை உறுதிப் படுத்தி அதிக பட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதையும் உறுதிப் படுத்தி வருகின்றனர்.
எனவே, நகர்ப்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் உரம் தொடர்புடைய இணையத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம்.
வேளாண்மைத் துறை மூலம் நடத்தப்படும் பயிற்சி மற்றும் கூட்டங்களில் இணைய வழி வாயிலாக ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை பரிவர்த்தனை செய்வதற்கான வழிவகை இல்லை என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.