தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தர ராஜன்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மாங்கனியின் சிறப்பும், விவசாயிகளின் உழைப்பும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு மா மகசூல் பாதிக்கப்பட்டது. மேலும், வெயில் உக்கிரத்தால், மா மரங்கள் காய்ந்தன. இதற்கு இழப்பீடு வழங்கத் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களைச் சேகரித்து அரசுக்குப் பரிந்துரை செய்தனர். வேளாண் பட்ஜெட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர்: தமிழக வேளாண் பட்ஜெட் கடந்தாண்டு ரூ.55 ஆயிரம் கோடியில் அறிவிக்கப் பட்டது. ஆனால், அதில் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது, ரூ.45 ஆயிரம் கோடிக்கு வேளாண் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதில் என்ன திட்டங்களை முறையாகச் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. இத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள், விவசாயிகளுக்கு எதுவும் நன்மை இல்லை. வேளாண்துறை அமைச்சர், விவசாயிகளிடம் நன்றாகப் பேசுகிறார். ஆனால், இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்த அல்வாவை விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளனர்.
அரசம்பட்டி தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி: தென்னை விவசாய மேம்பாட்டுக்குத் தனியாக ரூ.35.26 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 இடங்களில் தென்னையில் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பூச்சிகளை உருவாக்கி நோய் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை குறித்த அறிவிப்புகள் வந்துள்ளன. இந்த பட்ஜெட் மூலம் தென்னை விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு அரசு கொண்டு சென்றுள்ளது வரவேற்கத்தக்கது.
கிருஷ்ணகிரி அணை நீட்டிப்பு இடது புற கால்வாய் பாலேகுளி முதல் சந்தூர் வரை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவ குரு: எதிர்பார்த்த அளவுக்குத் திட்டங்கள் இல்லை. பெயரளவுக்கு மட்டும் அறிவிப்புகள் உள்ளன. மா விவசாயத்தைப் பற்றியோ எங்கள் இழப்புகள் குறித்தோ பேசவில்லை. புளி குளிர்பதன கிடங்கு, வாசனைத் திரவிய ஆலை அறிவிப்பு இல்லை. விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் பீடர் கேட்டோம். ஆனால் பவர் டிரில்லர் மட்டுமே வழங்கியுள்ளனர், இதனால் பலன் இல்லை. ரோஜா விவசாயிகள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அறிவிப்புகள் உள்ளன. மொத்தத்தில் சுமாரான பட்ஜெட். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.