அதிமுகவில் வெடிக்கிறதா பூகம்பம்? - சபாநாயகரை தனியாக சந்தித்து பேசிய செங்கோட்டையன்; இபிஎஸ் ஷாக்!


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று தனியாக சபாநாயகரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆர்பி உதயகுமார், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். ஆனால் அந்த கூட்டத்தை அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் புறக்கணித்தார். சட்டமன்ற கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்ற நிலையில், ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தால் அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் வெடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சமீபத்தில் வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டபோதும், அவரை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் தற்போது சபாநாயகரை செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியிருப்பது எடப்பாடி பழனிசாமியை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

x