சென்னை: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி நிதி பெற்றதாக பதியப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ1.55 கோடி நிதி பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதர் அலி் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிறை தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வசூலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.