ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். விழாவையொட்டி நேற்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியேற்றினார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேசுவரம் வேர்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழப்பாணம் முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை நடைபெற்றன. இரவில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இ ந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, விழாவில் பங்கேற்க பதிவு செய்திருந்த இந்திய பக்தர்கள் 3,424 பேர் 78 விசைப்படகுகள், 22 நாட்டுப் படகுகளில் கச்சத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில், ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், எஸ்.பி. சந்தீஷ், மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, வட்டாட்சியர் அப்துல் ஜப்பார், கடலோரக் காவல் படை அதிகாரி வினாய்குமார், சுங்கத் துறை துணை ஆணையர் பிரகாஷ் வழியனுப்பிவைத்தனர்.
கச்சத்தீவு செல்வோரின் பாதுகாப்புக்காக கடற் படையினர், கடலோரக் காவல் படையினர் மற்றும் தமிழக மெரைன் போலீஸார் ரோந்துப் படகுகளில் சென்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கச்சத்தீவில் இன்று காலை சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன், விழா நிறைவுபெறும்.