‘டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல்; திமுக அரசு பதவி விலகவேண்டும்’ - பட்ஜெட்டை புறக்கணித்து இபிஎஸ் ஆவேசம்!


சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் அடிப்படையில் ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் ரூ.40 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் விழுகிறது. இதற்கு அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்து பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். எனவே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஒரு வார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தொழிற்சாலைகள் மற்றும் இதர அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை சோதனை அடிப்படையில் ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், விசாரணை முழுமை அடையும்போது ரூ.40 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் விழுகிறது. ஆனால், இதுவரை அரசு தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

இதற்கு அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம்” என தெரிவித்தார்.

x