சென்னை: தமிழகத்தில் கைதிகளை வழிக்காவலுக்கு அழைத்துச் செல்லும் போலீஸார், அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு (டிக்கெட்) பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கானவாரன்ட் இருந்தாலே போதுமானது. இதேபோல், பணி நிமித்தமாக செல்லும் போலீஸாரும் அரசு பேருந்துளில் பெரும்பாலும் டிக்கெட் எடுப்பது இல்லை. ஆனால், சில நேரங்களில் நடத்துநர்கள் கண்டிப்பு காட்டி டிக்கெட் எடுக்க வலியுறுத்துவார்கள். இதனால், இரு தரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காவலர் முதல் ஆய்வாளர் வரை அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணம் செய்யலாம். இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் போலீஸாருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் நவீன அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டன.
அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காவல் ஆணையர் அருண், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் முன்னிலையில் நவீன அடையாள அட்டைகளை 10 போலீஸாருக்கு வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.