கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வந்தார். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், ஒப்பந்ததாரர் ஆகியோர் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இல்லை. இதைப்பார்த்த மேயர் சுந்தரி ராஜா, “இன்று (மார்ச் 10) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்ததால் இங்கு வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம், மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு திட்டங்கள் செயல்படுத்தி வருவதால், தற்போது இந்த பணியை எந்தவித பாதிப்பின்றி நடைபெற வேண்டி தொடங்கி வைக்கிறேன் எனக்கூறி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
இதையடுத்து மேயர் சுந்தரி ராஜா, உதவி பொறியாளர் பாரதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதில் மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவித்து உள்ளீர்கள். அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு நான் வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. கடந்த 5 நிகழ்ச்சிகளாக இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
நான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும்போது அதிகாரிகள் எதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீர்கள்? நான் பெண் மேயர் என்பதால் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து உதவி பொறியாளர் பாரதி, இனிவரும் காலங்களில் சரியான நேரங்களில் நிகழ்ச்சிக்கு வருகிறோம் என தெரிவித்தார்.
இதையடுத்து மேயர் சுந்தரி ராஜா பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரிடம் தெரிவித்துவிட்டு கிளம்பினார்.