திருவள்ளூர்: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான காய்கரி சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக இச்சந்தைக்கு காமராஜர் பெயரை மாற்றி கலைஞர் கருணாநிதி யின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளதாகவும், இதனை எதிர்த்தும் பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப் பட்டுள்ள நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.