தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக் கழிவு கொட்டப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக் கழிவு கொட்டப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும், இது சம்பந்தமாக பொதுமக்களை திரட்டி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவொரு அணு நிலையமும் செயல்படவில்லை. அணுக்கழிவும் வெளியேற்றப் படவில்லை. அணுக்கழிவை கொட்டுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கேயும் அதற்கென தனியாக இடமில்லை. எனவே, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்ப வேண்டாம். தவறான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.