கோவை: தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தவறினால் தேங்காய் விலை ரூ.100, இளநீர் விலை ரூ.200 எட்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்ததாவது: இந்திய அரசியலைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை மற்றும் உலகளாவிய நடைமுறை என்ற அடிப்படையில் கள் இறக்கிச் சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு மதுவிலக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஒரு குற்றச்செயலாகும். கள்ளை உணவாக ஏற்கும் கட்சிகள் கள் இறக்குபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தவறினால் ஓராண்டுக்குள் தேங்காய் விலை ரூ.100, இளநீர் விலை ரூ.200 எட்டும். எனவே, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள் தடையை தமிழக அரசு நீக்கி அறிவிக்க வேண்டும். சீனா, ஜப்பான் போல நெல்லில் இருந்து தரமான மது தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.