சென்னை: மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன் வெற்றி பெற்றார். அவர்வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி, அந்த தொகுதியில்தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில்தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில்,மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காததால், தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. தயாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சினேகா ஆகியோரும், வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தனும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.