பாஜகவுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது ஏன்? - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட விஜயகுமார் விளக்கம்!


சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால்தான் கையெழுத்திட்டேன்.நிச்சயமாக பொதுச் செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன், இதற்காக மன்னிப்பு கேட்பேன் என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் விளக்கமளித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது மஞ்சங்கரணையில் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் அப்போது காரில் வந்த நிலையில், அவரை வழிமறித்து அவரிடம் பாஜக நிர்வாகிகள் ஆதரவு கேட்டனர்.

தொடர்ந்து எல்லாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் பாஜக நிர்வாகிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ ( மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்’ எனத்தெரிவித்துள்ளார்

இதுகுறித்து , அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் விளக்கமளிக்கையில், “ நான் கிராமத்து வீட்டிலிருந்து வெளியே வந்தபோது பாஜகவினர் எனது காரை வழிமறித்து கையெழுத்து கேட்டனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, பொதுச்செயலாளர் கொள்கைதான் எனக்கு கொள்கை என சொன்னேன். அப்போது உள்ளூர் பாஜகவினர் வற்புறுத்தினர். நான் அப்போதே நீங்கள் போட்டோ, வீடியோ எடுத்து பரப்புவீர்கள் என சொன்னேன். அப்படியெல்லாம் செய்யமாட்டோம் என அவர்கள் கூறினார்கள்.

இதுபோல மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால்தான் கையெழுத்திட்டேன். நான் வேண்டாம் என்றே சொன்னேன், அழுத்தம் கொடுத்தால் கையெழுத்து போட்டேன். நிச்சயமாக பொதுச் செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன், இதற்காக மன்னிப்பு கேட்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

x