பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்!


சென்னை: பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடந்த கையெழுத்து இயக்கத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது மஞ்சங்கரணையில் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் அப்போது காரில் வந்த நிலையில், அவரை வழிமறித்து அவரிடம் பாஜக நிர்வாகிகள் ஆதரவு கேட்டனர்.

தொடர்ந்து எல்லாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் பாஜக நிர்வாகிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ ( மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்’ எனத்தெரிவித்துள்ளார்

x