யானைகள் நடமாட்டத்தால் பதற்றம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!


திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு மறு அறிவிப்பு வரை வனத்துறை தடை விதித்துள்ளது. அதேநேரம், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் இடம் பெயர்ந்து வனப் பகுதிக்குள் சென்றதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்றனர்.

x