பெரியகுளம் அருகே அடுத்தடுத்து 5 ஆடுகளை தாக்கிக் கொன்ற சிறுத்தை - பொதுமக்கள் தனியே செல்ல தடை


மஞ்சளாறு அணை மலைப்பகுதியின் பாறை மீது நின்று கொண்டிருந்த சிறுத்தை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள மலையடிவாரத்தில் அடுத்தடுத்து 5ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து அப்பகுதியிலே அந்த சிறுத்தை சுற்றித் திரிவதால் தனியே யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(35). ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும் விவசாய நிலங்களில் ஆங்காங்கே கிடை அமைத்தும் வருகிறார். கடந்த ஒரு மாதமாக அட்டணம்பட்டியில் இருந்து காமக்காபட்டி செல்லும் சாலையில் கருப்பசாமி கோயிலுக்கு அருகே உள்ள தோட்டத்தில் கிடை அமைத்து இருந்தார். தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச்சென்று விட்டு மாலையில் தோட்டத்தில் அடைத்து வைப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிடையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை காணவில்லை. ஆட்டின் ரத்தம் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இன்று (மார்ச் 6) அதிகாலையில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. காவலுக்கு இருந்த ஜெயக்குமார் ஓடிவந்து பார்த்த போது ஆடுகள் இருந்த இடத்தில் இருந்து சிறுத்தை ஒன்று ஓடியது. கிடையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் கடிபட்டு குதறிய நிலையில் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து அவர் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், “ஏற்கெனவே 3 ஆடுகளை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்று விட்டது. ரத்த ருசி பார்த்த சிறுத்தை மீண்டும் அதே இடத்துக்கு வந்து 2 ஆட்டை கொன்று விட்டது. இதனால் 5 கி.மீட்டர் தள்ளி வந்து ஊருக்கு அருகில் தற்போது ஆடுகளை அடைத்து வைத்திருக்கிறேன்.

அந்த சிறுத்தை தொடர்ந்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்று ஒரு கன்றுக்குட்டியை விரட்டியுள்ளது. அருகில் உள்ளவர்கள் அதனை காப்பாற்றி விட்டனர். ஆகவே சிறுத்தையை வனத்துக்குள் விரட்டுவதுடன் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்,” என்றார்.

இந்தப் புகாரின் பேரில் தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் இப்பகுதிக்கு தனியே யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

x