சென்னை: திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது.
அந்த அடையாளங்கள் போதாதென்று, தமிழ்ப் பெருந்தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளச் சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி, பராமரிப்பு என்ற பெயரில் ஐயா கருணாநிதி பெயரில் திறப்பது எவ்வகையில் நியாயமாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா ?
தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகள் செய்து, பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்றுவரை யாரும் வரவில்லையென்று மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்சியைத் தந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஏதும் இதுவரை நிறுவப்பட வில்லை என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் பெருந்தலைவரின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும்.
இந்நிலையில், பெருந்தலைவரின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க முயல்வது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப் போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று பூசி மொழுகியது.
அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், மற்றவர்களின் அடையாளத்தை அழித்து, வலிந்து திணிக்கப்படும், இதுபோன்ற விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நிலைக்காது! மக்கள் மனதிலும் நிலைக்காது!
ஆகவே, திருத்தணி நகரில், பெருந்தமிழர் ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய் கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்து கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.