சென்னை: சோவியத் யூனியன் சிதைவடைந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளாகப் பிரிந்ததில் அரசியல் - பொருளாதார பின்னணிகளுடன் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது. தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித் திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 9-வது கடிதத்தில், ‘மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும்.
இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தன் உயிரினும் மேலானத் தமிழையும் அதன் பண்பாட்டையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றியுள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1961-ம் ஆண்டு எடுக்கப்பட்டபோது இந்தியாவிலிருந்த தாய்மொழிகளின் எண்ணிக்கை 1652 எனப் பட்டியலிடப்பட்டது. மாநில மொழிகள் மட்டுமின்றி, பழங்குடிகள், இனக்குழுக்கள் உள்ளிட்டோர் பேசுகின்ற மொழிகளும் இந்தக் கணக்கில் வரும். பத்தாண்டுகள் கழித்த 1971-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 109 மொழிகள் மட்டுமே தாய்மொழிகள் பட்டியலில் இடம்பெற்றன. எப்படி இந்த திடீர் மாற்றம் ?
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளும், இவை தவிர, பத்தாயிரம் பேருக்கு மேல் பேசக்கூடிய மொழிகளும் மட்டுமே தாய்மொழி எனக் கணக்கிடப்படவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டதால், தாய்மொழிகளின் பட்டியலில் இருந்த 1500-க்கும் மேற்பட்ட மொழிகள் தங்கள் தகுதியை இழந்தன என்று மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தாய்மொழியாகவே அங்கீகரிக்கப்படாத மொழிகளைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் தங்கள் வாழ்வுரிமைக்கானத் தேவைகளை எதிர்கொள்வார்கள் ? ஆதிக்கம் செலுத்தும் மொழியைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைதான் அவர்களுக்கு ஏற்படும். அடுத்த தலைமுறை தனது தாய்மொழியை இழந்து, ஆதிக்க மொழியே அனைத்தும் என்ற நிலைக்குத் தள்ளப்படும். அதனால்தான் மொழித் திணிப்பை திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
உலகின் மிகப் பெரும் வல்லராசாக இருந்த சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், அதில் பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளாகப் பிரிந்ததில் அரசியல் - பொருளாதார பின்னணிகளுடன் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது. இணைந்திருந்த சோவியத் யூனியனில் பெரும்பான்மை மொழிக்காரர்களாக இருந்த ரஷ்ய மொழிக்காரர்கள், பிரிந்து சென்ற நாடுகளில் சிறுபான்மையினராக மாறினர். எங்கள் ரஷ்ய மொழியையும் ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று லாட்வியா உள்ளிட்ட நாடுகளிடம் அவர்கள் கேட்கக்கூடிய நிலைமை உண்டானது.
தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்தபோது, பாகிஸ்தான் என்ற தனிநாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து சுதந்திரமளித்தது பிரிட்டிஷ் அரசு. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு வங்காளம் இணைந்தது. அதாவது, அன்றைய பாகிஸ்தான் என்பது இந்தியாவுக்கு மேற்கில் ஒரு பகுதியையும், கிழக்கில் ஒரு பகுதியையும் கொண்டிருந்தது. பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களின் மொழி, உருது. கிழக்கு வங்காள மக்களின் மொழி, வங்காளம். இரண்டு பகுதி மக்களுக்கும் பண்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், உருது மொழி மட்டுமே ஒட்டுமொத்த பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது.
கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். மக்கள் பங்கேற்புடன் போராட்டங்களை நடத்தினர். பாகிஸ்தானில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கிழக்கு வங்காள மக்களின் குரலை மதிக்கவில்லை. வங்காள மொழிக்கு ஆதரவான போராட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தனர். 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் தாய் மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, டாக்கா நகரில் தடையை மீறி நடத்திய பேரணியின் மீது பாகிஸ்தான் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
தாய் மொழிக்காக உயிரிழந்த வங்காள மாணவர்களின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு மக்கள் கடைப் பிடித்தனர். 1971-ல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டத்தில் வென்றது. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்காளம் விடுதலை பெற்று, வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. பாகிஸ்தான் மக்களும், வங்கதேசம் என்கிற வங்கதேச மக்களும் மதத்தால் ஒன்று பட்டவர்கள். ஆனால், மொழியால் வேறுபட்டவர்கள். வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய மொழித் திணிப்பே புதிய நாடு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
வங்கதேச விடுதலைக்காக இந்திய ராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது நம் தலைவர் கருணாநிதியின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு. பிரதமர் நேரு ஆட்சிக் காலத்தில் இந்திய எல்லை மீது சீனா படையெடுத்தபோதும், இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக போர் நிதி திரட்டித்தந்த திமுக-வையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேவின் கொள்கையை ஆதரிப்பவர்கள். நாம் தாய்நாட்டை மதிக்கிறோம். தாய்மொழியை உயிரெனக் காக்கின்றோம். வங்கதேசத்தில் தாய்மொழியையும் அதன் பண்பாட்டுக் கூறுகளையும் காத்திடுவதற்காகப் போராடி உயிரிழந்த மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பிப்ரவரி 21-ம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கவேண்டும் என வங்கதேசத்தின் பிரதிநிதிகள் ஐ.நா மன்றத்தில் முன்மொழிந்தனர். அதற்கான ஆதரவையும் பெற்றனர்.
ஐ.நா அவையின் யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1999-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மொழி அழிந்தால், அந்த இனம் அழிக்கப்படும். அதன் மரபு வழி அறிவுச் செல்வம் மொத்தமாக அழிந்துபோகும். அதற்கு மாறாக, அவரவர் தாய் மொழிகளின் மீதான பிறமொழி ஆதிக்கத்தைத் தடுக்கும்போது, மொழி-பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து, உலக மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என்பதுதான் தாய்மொழி நாளின் நோக்கம்.
வங்காள மொழி மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் காத்திட 1952-ல் உயிர் கொடுத்தார்கள். அவர்களின் போற்றுதலுக்குரிய தியாக வரலாற்றுக்கு முன்பே, இந்தியா-பாகிஸ்தான் - வங்கதேசம் அனைத்தும் ஒரே நாடாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த 1938-ம் ஆண்டிலேயே, சென்னை மாகாணத்தில் ராஜாஜியின் அரசு திணிக்க முயன்ற இந்தியை எதிர்த்து, தாய்மொழியாம் தமிழைக் காக்கும் போராட்டத்தில் நடராசன்-தாளமுத்து என இருவர் தங்கள் உயிரைக் கொடுத்த தியாக வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு.
மொழி உணர்வுமிக்க வங்கதேச மாணவர்கள் பாகிஸ்தான் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மொழிப் போர்க்களத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்மொழியைக் காப்பதற்கு தங்கள் உடலுக்குத் தாங்களே தீவைத்துக்கொண்டு, ‘தமிழ் வாழ்க- இந்தி ஒழிக’ என்று முழங்கியபடியே உயிரைத் தியாகம் செய்தனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு மட்டுமின்றி, துணை ராணுவத்தின் வேட்டைக்கும் பலியான தீரர்களின் வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டவர்கள் நாம். உலகத் தாய்மொழி நாள் என்பது பிப்ரவரி 21-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளுமே நமக்குத் தாய்மொழி நாள்தான். ஆதிக்க மொழிகளிடமிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்கு எல்லா நாளிலும் விழிப்புடன் இருப்போம்.
நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர-சகோதரிகள்தான். இந்தித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வடமாநிலங்களின் சகோதர-சகோதரிகளின் நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் மொழிக் கொள்கை. இந்த கொள்கைப் பார்வை தற்போது கர்நாடகம், கேரளம், மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வெளிப்படுகிறது.
“கன்னடத்தைப் புறக்கணித்து, இந்தியைத் திணிப்பவர்களை ஏற்க மாட்டோம்” என்று கூறி கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இயற்கைத்தன்மையும் இயல்பான விருப்பமும் கொண்டவற்றைத்தான் உடலும் உள்ளமும் ஏற்றுக்கொள்ளும். திணிக்கப்படுவது எதுவாக இருந்தாலும் உடனடியாக அது வெளியேற்றப்படுவதுடன், மனிதர்களின் திறனையும் கெடுத்துவிடும். மொழித்திணிப்பு என்பதும் அப்படித்தான். தமிழ்நாடு முன்னெடுத்த மொழிக்கொள்கை அறிவியல்பூர்வமானதும் ஆக்கப்பூர்வமானதுமாகும். சமத்துவம் என்பது மொழிகளுக்கிடையிலும் இருக்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் 351-வது பிரிவை சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் நாளை ‘இந்தி திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகிறது.இந்தியைக் கொண்டாடும் அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்திய மொழிகளை அச்சுறுத்தும் திட்டங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
‘இந்தி திவாஸ்’ என்று கொண்டாடப்படுவது போல, 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கான நாட்கள் உண்டா? இந்தியைத் தவிர மற்ற இந்திய மொழிகளை பாரபட்சமாக அணுகுவது ஏன்? ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உயர்தனிச் செம்மொழி என்ற தகுதியுடைய எங்கள் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது?
எங்கள் அண்ணா அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. லட்சியம் நிறைவேறும்வரை கேட்டுக்கொண்டே இருப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.