நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால் 2 மாதங்களில் 550 அவமதிப்பு மனுக்கள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி


மதுரை: நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளன என வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அமுதாவிடம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர் செல்வநாயகம். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி செல்வ நாயகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். பணப் பலன்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வநாயகம் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த அவமதிப்பு மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அமுதா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டதற்கு மாவட்ட வருவாய் அலுவலர்தான் காரணம் என்றார்.

இதையடுத்து நீதிபதி, கடந்த 2 மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. இது நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதையே காட்டுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த செயலர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அளவிலான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 3 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக கல்வித் துறையில் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. இது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலர் சிவதாஸ்மீனா கடந்த 2023-ல் நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைப்போல், தலைமைச் செயலரின் உத்தரவையும் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். இருப்பினும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை ஒரு பொருட்டாக மதிப்பில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்ற முடிவுடன் அதிகாரிகள் உள்ளனர். இந்தப்போக்கு நல்லதல்ல என்றார். பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை 2 நாளுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

x