இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்துப் பேசினார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி மாதம் முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்து, கடந்த 5 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களைச் சந்திக்குமாறு தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின்பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று சிறைக்குச் சென்று மீனவர்களைச் சந்தித்தார்.
பின்னர் சிவஞானம் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும், மீண்டும் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க வரமாட்டோம், ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில் ஒருமுறை மட்டும்தான் குடும்பத்தினருடன் செல்போனில் பேச அனுமதி வழங்கப்பட்டது, மீண்டும் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்" என்றார்