திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.52 கோடியை பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநீர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களில், இந்து சமய அறநிலைய துறை உண்டியல்களை வைத்து பக்தர்களிடம் காணிக்கையை பெற்று வருகிறது. இக்காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இப்பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக ரூ.3 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரத்து 845 மற்றும் 229 கிராம் தங்கம், ஒரு கிலோ 750 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றும் தொடரும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.