திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிப்பட்டம் வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது.

கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற வைபவம் தொடங்கியது. 5.20 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. திருவாவடுதுறை ஆதினம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார்.

இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிவன் கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாள் திருவிழாவான 12-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். 13-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது

x