நீட் தேர்வால் திண்டிவனம் மாணவி தற்கொலை - திமுக அரசே பொறுப்பு என இபிஎஸ் குற்றச்சாட்டு


சென்னை: நீட் ரத்து என பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்து மதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு தான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அந்த நீட் ரகசியத்தை உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய் தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

x