சென்னை: சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த போது, சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் சிறுமி வீட்டுக்குச் சென்று, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அரவிந்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். தீர்ப்புக்கு பிறகு அரவிந்துக்கு போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து புழல் சிறையில் அடைத்தனர்.