கோடை மழையால் பிஏபி பாசனத் திட்ட தொகுப்பு அணைகளில் உயரும் நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி 


கோடைமழையால் உயர்ந்து வரும் ஆழியாறு அணையின் நீர்மட்டம் 

பொள்ளாச்சி: கோடை மழையால் பிஏபி பாசனத் திட்ட தொகுப்பு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தில் மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு மற்றும் உடுமலை பகுதியில் திருமூர்த்தி அணை என தொகுப்பு அணைகள் உள்ளன. பிஏபி திட்ட அணைகளில் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை மற்றும் காண்டூர் கால்வாய் மூலம் சமவெளியில் உள்ள ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதில் திருமூர்த்தி அணை பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும் ஆழியாறு அணை பாசனத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்காததால், பிஏபி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. இதனால் பாசன நிலங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக வால்பாறையில் மழையின்றி, கோடைக்காலத்தில் வெப்ப அலை வீசியதால், பிஏபி திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் சென்றது.

இந்நிலையில் வால்பாறையில் கடந்த இரு வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பிஏபி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 27.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 146 கன அடியாகவும், ஆழியாறு அணையின் நீரமட்டம் 75.75 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 கன அடியாகவும் உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 31.10 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு 40 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது.

இதனால் பிஏபி பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள பருவமழை தீவிரமடைந்தால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.