ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி - பேருந்துகள் எளிதாக சென்று வர வழி இல்லாததால் சிக்கல்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், அங்கு பேருந்துகள் எளிதாக சென்று வர வழி இல்லாததால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் நெருக்கடியுடன் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதால், ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என 2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சந்திக்கும் இடத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, இரு உணவகங்கள் உட்பட 64 கடைகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் எளிதாக சென்று வருவதற்கு வழி இல்லாததால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நான்கு வழிச்சாலையில் மாநில நெடுஞ்சாலை குறுக்கிடும் இடங்களில் இரு புறமும் வாகனங்கள் சென்று வர தனித்தனியாக அணுகு சாலை அமைக்கப்படும். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைக்கும் சேர்த்து மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால், ஒரு புறம் மட்டுமே அணுகு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளம் உள்ள பகுதியில் அணுகு சாலை அமைக்கப்பட வில்லை.

இதனால் மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் அணுகு சாலை வழியாக பேருந்து நிலையம் வந்து விட்டு, மீண்டும் அதே பாதையில் திரும்பி நான்கு வழிச்சாலையில் 'யூ டர்ன்' அடித்து செல்ல வேண்டும். ராஜபாளையத்தில் இருந்து வரும் பேருந்துகள் மதுரை செல்வதற்கான அணுகு சாலையில் 'யூ டர்ன்' அடித்து திரும்பி சிவகாசி சாலைக்கு வந்து, வாகனங்கள் இறங்கும் அணுகு சாலையில் சென்று பேருந்து நிலையம் வர வேண்டும். மீண்டும் அதே வழியாக திரும்பி சென்று மதுரை செல்ல வேண்டும். இந்த சிக்கல்களால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலை ஓரத்திலே பயணிகளை இறக்கி விட்டு செல்ல வாய்ப்புள்ளது.

நகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி மேம்பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் கிராசிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணுகு சாலை இல்லாமல் பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல தனி சாலை ஏற்படுத்தினால் மட்டுமே பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்துக்கு ஆண்டாள் பெயர் சூட்ட வேண்டும்: இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை தமிழ் பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு ஆண்டாள் பெயர் சூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

x