சிவகங்கை: செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்தச் சுங்கச் சாவடி புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி சுங்கச் சாவடியிலிருந்து 23 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை விதியை மீறியதாகும். இதனால் செண்பகம்பேட்டை சுங்கச் சாவடியை அகற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, லெம்பலக்குடி சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். இதை ரத்து செய்து செண்பகம் பேட்டை சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இளங்கோ என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இதை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் லெம்பலக்குடி, செண்பகம் பேட்டை சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை 36ல் அமைந்துள்ளன. லெம்பலக்குடி சுங்கச்சாவடி 2011-ல் அமைக்கப்பட்டது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி 2017-ல்தான் நிறுவப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை எங்கு அமைக்க வேண்டும் என்பதே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதிக்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். லெம்பலக்குடி சுங்கச்சாவடி முதலில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி விதிமீறி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.