உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டக் கூடாது: நாகை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு


நாகை: உத்தமசோழபுரத்தில் தடுப்பணைக் கட்டக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் நேற்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமம் கடலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க உத்தமசோழபுரத்தில், வெட்டாற்றின் கரையில் ரூ.49.50கோடியில் தடுப்பணைக் கட்ட பிப்.21-ம் தேதி பூமி பூஜை நடைபெற்றது.

ஆனால், அங்கு தடுப்பணைக் கட்ட உத்தமசோழபுரம் மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், இங்கு கட்டுவதற்குப் பதிலாக நாகூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பூதங்குடி கிராமத்தில் தடுப்பணையை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் 50-க்கும் அதிகமானர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியது: தற்போது தடுப்பணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு கிழக்கே உத்தமசோழபுரம், நரிமணம், பூதங்குடி, பெருங்கடம்பனூர், பாலக்காடு உள்ளிட்ட 10-க்கும் அதிகமான ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் தடுப்பணை கட்டினால், வெட்டாற்றின் வலது பகுதியில் வளப்பாற்றில் இருந்தும், தென் பகுதியில் தேவ நதியில் இருந்தும் கடல் நீர் உட்புகுந்து 10 ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் பாதிக்கப்படும். 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாய நிலங்களில் உப்ப நீர் காரணமாக உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

கால்நடைகளுக்கு குடிநீர், உணவுத் தடுப்பாடு ஏற்படும். இதுதொடர்பாக பூமி பூஜை நடைபெற்ற நாளன்றே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எங்கள் எதிர்ப்பை மீறி உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டால் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

x