சென்னை: அரசின் அவலங்களில் இருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்தி எதிர்ப்பை திமுக கையில் எடுத்துள்ளது என்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை சென்னை அடையாறில் திறந்து வைத்த கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கொலை, கொள்ளை வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாச்சாரம் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த அவலங்களில் இருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.
அதேநேரத்தில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது. இந்தியைதான் படிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை.
இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசை அணுகி தேவையான நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்சி-க்கு இணையான தரமான கல்வியை கொடுக்க முன்வர வேண்டுமே தவிர, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இப்போதும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக என்டிஏ இருக்கும். திமுக அரசின் அவலங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வரும் தேர்தலில் கெட்அவுட் திமுக என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். இவ்வாறு கூறினார்.