ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர் நீட்ஸ் திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நீட்ஸ் (NEEDS) திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் மருத்துவர் அச்சுதன் என்பவர் ஜீவன் லைப் மருத்துவமனை என்ற பெயரில் ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் கடனுதவி பெற்று மருத்துவமனை கட்டி மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வருகிறார். இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா 'நிறைந்தது மனம் நிகழ்ச்சி'யின் வாயிலாக நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆட்சியர் சந்திரகலா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ தமிழக முதல்வர் மூலமாக, முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கைக்கொடுக்கும் நோக்கத்தில் நீட்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக அவர்களை ஊக்குவிக்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து பிரிவினரும் பயன் பெறலாம். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்டத்தில் உற்பத்தி அல்லது சேவை தொழில் நிறுவனங்களை அமைக்கலாம்.
இதற்கு குறைந்தபட்சம் 12 -ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழில் நுட்ப கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோரின் பங்களிப்பு பொது பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10 சதவீதம் சிறப்பு பிரிவினருக்கு 5 சதவீதமாகும். தனிநபர் முதலீட்டு மானியம் திட்டத்தில் 25 சதவீதமாகும். அதிகபட்சம் ரூ. 75 லட்சம் வரை மானியமும் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு நிதியாண்டில் 16 விண்ணப்பங்கள் பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததில், 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், 13 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 11 பயனாளிகளுக்கு ரூ.155.21 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அரசின் மானியத்தை பெறலாம். அத்துடன், குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் செய்து தொழில் முனைவோராக உருவாகி, மற்றவர்களும் வேலை வழங்கி முன்னேற்றம் அடையலாம். இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் " என்றார்.