சென்னை: தமிழகம் எப்போதும் மும்மொழி கொள்கைக்கு எதிரானது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:மத்திய அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு சேரவேண்டிய நிதி உரிமையைதான் கேட்டு வருகிறோம். தமிழக மாணவர்களின் கல்விக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வித் தொகையைதான் கேட்கிறோம்.
ஆனால், இந்த ஆண்டில் ‘புதிய தேசிய கல்விக் கொள்கையை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என கூறுகின்றனர். தமிழகம் எப்போதுமே மும்மொழி கொள்கைக்கு எதிராகத்தான் இருந்துள்ளது. இதில் நாங்கள் என்ன அரசியல் செய்கிறோம். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டோம். மொழிப் போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழகம்.
கல்வி என்பது தமிழர்களின் உரிமை. இதில் இருந்தே யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணாமலை பற்றி பேச விருப்பம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.