‘நெல் கொள்முதல் மையங்களில் மாமூல் கேட்டு மிரட்டும் ஆளும் கட்சியினர்’ - ஆட்சியரிடம் கண்ணீர் வடித்த விவசாயி


நெல் கொள்முதல் செய்வதற்கு ஆளுங்கட்சியினர் லஞ்சம் கேட்பதாக மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “அரசு நெல் கொள்முதல் மையம் ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய நிர்வாகிகள் 19 பேர் கொண்ட குழுவுக்கு மாமூல் கொடுத்தால்தான் கொள்முதல் செய்கின்றனர். எனது நெல் மூட்டைகளை 5 நாட்கள் எடை போடாமல் நிறுத்திவிட்டனர். பின்னர் மாமூல் கொடுத்த பின்புதான் எடை போட்டனர். இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும்” என செல்லம்பட்டி விவசாயி கண்ணீர் மல்கக் கூறியதை கேட்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

மதுரையில் இன்று (பிப்.21) மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராகவேந்திரன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை கோட்டப் பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் குறித்து பேசியதற்கு அதிகாரிகள் பதிலளித்த விவாதங்கள் நடந்தது.

மணிகண்டன், “அரசு நெல் கொள்முதல் மையம் அமைப்பதில் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கட்சிகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தப் பார்க்கிறார். அங்கு ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக இருக்கிறது. அங்கு பல முறைகேடுகள் நடக்கிறது” என்றார். அதற்கு ஆட்சியர், “அரசு நெல் கொள்முதல் மையத்தை யாருக்கும் குத்தகைக்கு விடவில்லை. அரசாங்கம்தான் நடத்துகிறது. யார் தலையீடு செய்தாலும் தைரியமாக என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளியுங்கள்” என்றார்.

பாண்டியம்மாள், “வயலில் கஷ்டப்பட்டு உழுது அறுவடை செய்வது விவசாயிகள். கடைசியில் மையத்தை நடத்துவதற்கு கட்சிக்காரர்களுக்கு ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்” என்றார்.

நாட்டாபட்டி விவசாயி மணவாள கண்ணன், “செல்லம்பட்டி ஒன்றியத்தில் நாட்டாபட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் திமுகவினர் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்களது பெயர்களை சொல்ல விரும்பவில்லை. திமுக கட்சிக்காரர்கள் “19 பேர் கொண்ட குழுவினர் உள்ளோம். எங்களுக்கு கப்பம் கட்டாமல் நெல்லை விற்க முடியாது” என மிரட்டுகின்றனர். இதனால் எனது நெல் மூட்டைகளை 5 நாட்கள் எடைபோடாமல் நிறுத்திவிட்டனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் தகாத வார்த்தைகளால் என்னோடு சண்டையிட்டனர். பின்பு ஒரு மூட்டைக்கு ரூ.70 வீதம் 600 மூட்டைக்கும் (15 ஏக்கர்) கப்பம் கட்டிய பிறகுதான் எடை போட்டனர். அவர்களது தொல்லை தாங்கமுடியவில்லை. எனவே ஆஸ்டின்பட்டியிலுள்ள நிரந்தர நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விவசாயிகள் எந்நேரமும் விற்பனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

அதற்கு ஆட்சியர், “நீங்கள் உடனடியாக என்னிடம் புகார் அளித்திருக்கலாமே” என்றார். விவசாயிகள், “முழுக்க, முழுக்க ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களாலும் தடுக்க முடியாது,” என்றனர். ஆட்சியர், “இப்போது எங்கெங்கு முறைகேடுகள் நடக்கிறது என எழுத்துப்பூர்வமாக புகார் தாருங்கள். எந்த ஒன்றியச் செயலாளர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது மற்ற விவசாயிகளும் ஒட்டுமொத்த குரலில் ‘எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஆளும்கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது’ என்றனர்.

மாங்குளம் மலைச்சாமி, “மாவட்டம் முழுவதும் பருவகால மாற்றத்தால் நெல் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 2-லிருந்து 4 மூட்டைகள்தான் கிடைத்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததாக போலி கணக்கு காட்டி அரசை அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர்” என்றார்.

எம்பி.ராமன், “1989-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.இதில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் கொள்முதல் செய்ய அனுமதிக்கூடாது” என்றார். ஆட்சியர், “மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டதில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தை அனுமதிக்கக் கூடாது என கருத்துகளை தெரிவித்தனர். இதனை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

பழனிசாமி, “அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. பல ஆண்டாகியும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை. ஆலையை திறக்கும்வரை போராட்டம் தொடரும்” என்றார்.

x