மதுரை: மதுரை மக்களுக்கும் திரையரங்குகளுக்குமான தொடர்பு முக்கியமானது. இங்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாததால் சினிமா பார்ப்பதே முக்கிய பொழுதுபோக்காக இருந்துள்ளது.
இதுவே மதுரையில் அதிகமான திரையரங்குகள் உருவாக காரணமாக இருந்துள்ளது. கால ஓட்டத்தில் மதுரையின் பழம்பெரும் திரையரங்குகளான தங்கம், சிந்தாமணி போன்றவை வணிக நிறுவனங்களாகவும் மாறிவிட்டன. மீனாட்சி, கல்பனா, அலங்கார், நியூ சினிமா போன்றவைகளும் செயல்படாமல் போயின.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வரும்வரை மதுரையின் நவீன திரையரங்குகளில் ஒன்றாக திகழ்ந்த அம்பிகா தியேட்டரும் விரைவில் இடிக்கப்பட உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரால் அம்பிகா என்ற பெயரில் கல்லூரி, தியேட்டர் ஆகியவை தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டர் நிர்வாகம் வேறொருவருக்கு கைமாறி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக திகழ்ந்த அம்பிகா தியேட்டரும் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக மாறப்போகிறது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் முதன்முறையாக அம்பிகா திரையரங்கில்தான் டிடிஎஸ் ஒலி அமைப்பில் 'ரட்சகன்' திரைப்படம் திரையிடப்பட்டது. காலத்துக்கேற்ப 2கே, 3கே, 4கே தொழில்நுட்பமும் கொண்டுவரப்பட்டது. பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே போன்ற பல படங்கள் நூறு நாட்களை கடந்து ஓடி இருக்கின்றன. இங்குள்ள கேன்டீனில் பிற தியேட்டர்களைவிட குறைந்த விலையில் கோன் ஐஸ் கிரீம் போன்ற ஸ்நாக்ஸ்கள் விற்கப்படும் என, ரசிகர்கள் தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து அம்பிகா திரையரங்க நிர்வாகி ஒருவர் கூறியது: அம்பிகா திரையரங்க வளாகம் முழுவதையும் இடித்துவிட்டு பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக விரைவில் இந்த தியேட்டர் மூடப்படுகிறது. இதையொட்டி இன்று (பிப். 21) ரசிகர்களுக்காக திரையரங்கம் முன்பு செல்போனில் செல்பி எடுத்து கடைசியாக மலரும் நினைவுகளை பகிரும் வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
மதுரையைச் சேர்ந்த சினிமா விமர்சகர் கு.கணேசன் கூறுகையில், ‘மதுரையின் முக்கிய அடையாளங்களாக தியேட்டர்கள்தான் உள்ளன. சுமார் 1,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான பெரிய தியேட்டர்கள் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக நிறுவனங்களாக மாறின. சில தியேட்டர்கள் செயல்படாமல் முடக்கிவிட்டன. மேலும் ஓடிடி, யூடியூப் வருகையாலும், தியேட்டர்களுக்கு செல்வதால் ஏற்படும் அதிக செலவு காரணமாகவும் குடும்பத்துடன் அடிக்கடி திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுபோன்ற சூழலால் பெரிய தியேட்டர்களை மூடுவதும், வர்த்தக மையங்களாக மாற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது, என்றார்.