சென்னை: மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. பேராசிரியர் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசின் அடுத்த பட்ஜெட் வரும் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறோம்.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 வழங்குவதால் இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்துள்ளது. நான் முதல்வன் திட்டம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் வருகையையும், ஊட்டச்சத்து நிலையையும், கற்றல் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது.
இப்படி பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பல ஆண்டு காலமாக, தமிழகத்தில் சிறந்து விளங்கும் மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளிஉற்பத்தி, தோல்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தோல் அல்லாதகாலணி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைப் பொருட்கள் உற்பத்தி,உலகளாவிய திறன்மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்சித்துறைகளாக முன்னிறுத்தி, இந்த துறைகளிலும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம். நலத்திட்டங்களையும் கட்டமைப்பு மேம்படுத்துதலையும் ஒரே நேரத்தில் செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான உங்களின் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் நான் எதிர் நோக்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.