உயர் நீதிமன்றத்தில் 2009 பிப். 19-ம் தேதி போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு


கடந்த 2009-ல் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, பிப்.19-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகளை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை போலீஸார் கைது செய்தனர். | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர்கள் மீது போலீ​ஸார் நடத்திய தடியடி சம்பவத்​தைக் கண்டிக்​கும் வகையில் 16-வது ஆண்டாக வழக்​கறிஞர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்​தனர். சிபிஐ அலுவல​கத்தை முற்றுகை​யிடச் சென்ற வழக்​கறிஞர்களை உயர் நீதி​மன்ற நுழைவு வாயில் பகுதி​யில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்​கை​யில் நடந்த உள்நாட்டுப் போரின்​போது தமிழர்கள் கொடூரமாக கொலை செய்​யப்​பட்​டதைக் கண்டிக்​கும் வகையில் சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்கள் தொடர் போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது உயர் நீதி​மன்றம் வந்த பாஜக மூத்த தலைவரான சுப்​ரமணியன் சுவாமி மீது அழுகிய முட்டை வீசப்​பட்​டது.

இது தொடர்பாக வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் கடந்த 2009 பிப்.19 அன்று சம்பந்​தப்​பட்ட வழக்​கறிஞர்களை கைது செய்ய முற்​பட்​ட​போது ஏற்பட்ட பிரச்​சினை காரணமாக போலீ​ஸார் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் தடியடி நடத்​தினர். இதில் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​கள், நீதி​மன்​றத்​துக்கு வருகை தந்த பொது​மக்கள் என பலரும் படுகாயமடைந்​தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது. ஆனால், சிபிஐ ஒரு சில போலீ​ஸார் மீதும், 50-க்​கும் மேற்​பட்ட வழக்​கறிஞர்கள் மீதும் குற்​றஞ்​சாட்டி குற்​றப்​பத்​திரி​கையை தாக்கல் செய்​தது. தடியடி சம்பவத்​துக்கு காரணமான போலீஸ் உயரதி​காரிகள் மீது எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை என வழக்​கறிஞர்கள் குற்​றம்​சாட்டி வருகின்​றனர். இந்த சம்பவத்​தைக் கண்டிக்​கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும்

பிப்​.19-ம் தேதியை சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்​றனர். அதன்படி 16-வது ஆண்டு கருப்பு தினமான நேற்று சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்கள் சங்கத்​தின் தலைவர் ஜி.மோக​னகிருஷ்ணன் தலைமை​யில் ஏராளமான வழக்​கறிஞர்கள் ஆவின் நுழைவு வாயில் பகுதி​யில் திரண்டு சிபிஐ அதிகாரி​களைக் கண்டித்து கோஷம் எழுப்பி போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

பி்ன்னர் சிபிஐ அலுவல​கத்தை முற்றுகையிட பேரணி​யாகச் செல்ல முற்​பட்​டனர். அதையடுத்து போராட்​டத்​தில் ஈடுபட்ட வழக்​கறிஞர்களை உயர் நீதி​மன்​றத்​தின் வெளியே கைது செய்த போலீ​ஸார், ராயபுரத்​தில் உள்ள திருமண மண்டபத்​துக்கு அழைத்​துச் சென்று தங்க​வைத்து மாலை​யில் விடு​வித்தனர்.

வழக்​கறிஞர்​களின் இந்த போராட்டம் காரணமாக என்எஸ்சி போஸ் சாலை​யில் சிறிது நேரம் போக்கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதேபோல் எழும்​பூர் நீதி​மன்ற வாயி​லில் நடைபெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் எழும்​பூர் நீ​தி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் துரை கண்​ணன்,
துணைத் தலை​வர் பாபு, செய​லா​ளர் பாரதி உள்​ளிட்ட வழக்​கறிஞர்​கள் ​திரண்டு கோஷமெழுப்​பினர்​.

x