விருதுநகரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் வேதிப்பொருள் கொட்டியதால் அப்பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது.
விருதுநகர் கலைவாணர் நகரில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மறு சுழற்சி நிறுவனம் உள்ளது. இங்கு பொருட்களை கீழே இறக்கி வைத்தபோது எதிர்பாராத விதமாக வேதிப்பொருள் கீழே விழுந்து சிதறியது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாத அளவுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிறுவனத்தினர் உடனடியாக வேதிப்பொருள் சிதறிய பகுதிகளில் தண்ணீரை ஊற்றி அதன் மீது மணலைக் கொட்டி மூடினர். தகவலறிந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். வேதிப்பொருள் கீழே விழுந்த இடத்தில் நகராட்சி ஊழியர்கள் கிரிமிநாசினி தெளித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் மூடப்பட்டது.