தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக தளங்களை 8 வார காலத்தில் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சட்டவிரோத அத்துமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்ட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக தளங்களை 8 வார காலத்துக்குள் இடிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் தரைத்தளத்துடன் கூடிய மூன்று தளங்களுக்கு அனுமதி பெற்றுவிட்டு `10 மாடி தளங்கள் கட்டிய தனியார் கட்டுமான நிறுவனம், அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக கட்டிடத்தை இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. அதேபோல வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசும் மேற்கொள்ளக் கூடாது.

ஒருபுறம் முறையாக தி்ட்ட அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டக்கூடாது என வலியுறுத்தி வரும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பது என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு அரசே வழிவகுப்பது போலாகும். சட்டவிரோத அத்துமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்ட முடியாது.

சட்டவிரோதமாக கட்டியுள்ள 10 தளங்களை வரன்முறை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை எதிர்த்து மனுதாரர் வழக்குத் தொடரவில்லை. மாறாக அந்த கட்டிடத்தை இடிக்க பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதை ஏற்க முடியாது.

எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே அத்துமீறி கட்டப்பட்டுள்ள தளங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 8 வார காலத்துக்குள் இடிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கட்டுமான விதிமீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் தொகையை முதலீடு செய்து வி்ட்டார்கள் என்ற காரணத்துக்காக சட்டவிரோதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உத்தரவிட்டுள்ளனர்.

x