கடலூர்: சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி மகன் சரண் (23). புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் பல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி புவனகிரியில் இருந்து சிதம்பரத்திற்கு தந்தையுடன் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி அவரது உடல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமா தேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரண் உடலில் இருந்து இதயம், கிட்னி, கண்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.
அவரது உடல் உறுப்புகள் சென்னை தனியார் மருத்துவமனையில் தயாராக உள்ள நோயாளிக்கு வழங்க உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் இறுதிச் சடங்குக்காக அவரது தந்தை தமிழ்ஒளியிடம் உடலை ஒப்படைத்தனர். சரண் தானம் செய்த உடல் உறுப்புகளால், விடியல் ஆப்பில் பதிவு செய்திருந்த 6 பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.