சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த கட்சியுமான அதிமுகவும் தேர்தல் ஓட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதிமுக கொள்கைகளுக்கு பொருத்தமான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று கட்சி ரீதியில் செயல்பட்டு வரும்மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் பழனிசாமி நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளைதுரிதப்படுத்துவது முதலான பணிகளை விரைவாக முடிப்பதற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு செ.செம்மலை, மதுரை மாநகர் மாவட்டத்துக்கு பா.வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.கோகுல இந்திரா, கரூர் மாவட்டத்துக்கு எம்.சின்னசாமி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்துக்கு சேவூர் எஸ்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வைகைச்செல்வன், கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், வேலூர் புறநகர் மாவட்டத்துக்கு செஞ்சி ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு அன்வர் ராஜா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு இன்பதுரை, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு வி.சரோஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாக தொடர்பு டைய மாவட்டங்களுக்கு சென்று, அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, அதன் விவரங்களை மார்ச் 31-க்குள் கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.